பெருமை பாராட்டுதல் பயனற்றதே; ஆயினும் பெருமை
பாராட்டவேண்டிய தேவை இருப்பதால், ஆண்டவர் அருளிய காட்சிகளையும்,
வெளிப்பாடுகளையும் சொல்லப் போகிறேன்.
2 கிறிஸ்தவன் ஒருவன் எனக்குத் தெரியும்; அவன்
பதினான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்றாம் வானம் வரை கவர்ந்தெடுக்கப்பட்டான்
உடலோடு அங்குச் சென்றானோ உடலின்றிச் சென்றானோ யானறியேன், கடவுளே அறிவார்
3 அந்த ஆள் 'வான் வீட்டுக்குள்
கவர்ந்தெடுக்கப்பட்டது எனக்குத் தெரியும். உடலோடு அங்கே சென்றானோ
உடலின்றிச் சென்றானோ எனக்குத் தெரியாது, கடவுளுக்கே தெரியும்.
4 அங்கே மனித மொழிக்கெட்டாத சொற்களை, மனிதன் திருப்பிச் சொல்லக் கூடாத சொற்களைக் கேட்டான்.
5 அவனைப் பற்றியே நான் பெருமை பாராட்டுவேன்; என்னைப் பற்றிப் பெருமை பாராட்டாமாட்டேன். என் குறைபாடுகளே எனக்குப் பொருமை!
6 அப்படி நான் பெருமைப்பட விரும்பினாலும், அது
அறிவீனமாய் இராது; சொல்வது உண்மையாகவே இருக்கும். ஆயினும் என்னிடம்
காண்பதிலும் கேட்பதிலும் உயர்வாக என்னைப்பற்றி யாரும் எண்ணாதபடி நான்
பெருமை பாராட்டாது விடுகிறேன்.
7 ஆகவே, எனக்கருளிய தனிப்பட்ட வெளிப்பாடுகளால் நான்
செருக்குறாதபடி இறைவன் அனுப்பிய நோய் ஒன்று என் உடலில் தைத்த முள்போல்
வருத்தியது. அது என்னைக் குத்திக் கொடுமைப்படுத்தச் சாத்தான் அனுப்பிய
தூதனைப்போல் இருந்தது; நான் செருக்குறா திருக்கவே இவ்வாறு நடந்தது.
8 ஆதலால் என்னிடமிருந்து அதை அகற்றுமாறு மும்முறை ஆண்டவரை வேண்டினேன்.
9 அவரோ, "நான் தரும் அருள் உனக்குப் போதும்;
ஏனெனில், மனித வலுவின்மையில் தான் என் வல்லமை சிறந்தோங்கும்" என்று
சொல்லிவிட்டார். ஆகையால் நான் என் குறைபாடுகளில் தான் மனமாரப்
பெருமைப்படுவேன். அப்போதுதான் கிறிஸ்துவின் வல்லமை என்னுள் குடிகொள்ளும்.
10 ஆகவே, நான் என் குறைபாடுகளைக் காணும்போது,
இழிவுறும்போது, நெருக்கடியில் இருக்கும்போது, துன்புறுத்தப்படும்போது,
இடுக்கண்ணுறும் போது கிறிஸ்துவை முன்னிட்டு நான் மனநிறைவோடு இருக்கிறேன்.
ஏனெனில், வலுவின்றி இருக்கும்போது தான் நான் வலிமை மிக்க வனாயிருக்கிறேன்.
11 இப்படிப் பேசுவது அறிவீனமே; நீங்களே என்னை
இப்படிப் பேச வைத்தீர்கள். நீங்களே எனக்கு நற்சான்று தந்திருக்கவேண்டும்.
நான் ஒன்றுமில்லை எனினும், அந்தப் பேர்போன அப்போஸ்தலர்களுக்கு நான் எதிலும்
தாழ்ந்தவனல்லேன்.
12 உண்மை அப்போஸ்தலனுக்குரிய அறிகுறிகள் உங்களிடையே
செய்யப்பட்டன. நான் கொண்டிருந்த தளார மனவுறுதி, செய்த அருங்குறிகள்,
அற்புதங்கள், புதுமைகள் இவையே அப்போஸ்தலனைக் காட்டும் அறிகுறிகள்.
13 மற்றச் சபைகளுக்கு நேராத குறை உங்களுக்கு
மட்டும் என்னால் என்ன நேர்ந்தது? நான் உங்களுக்குச் சுமையாய் இல்லாததைத்
தவிர, வேறு என்ன குறை? ஆம், அது அநியாயந்தான்; மன்னித்துக்கொள்ளுங்கள்.
14 இதோ, மூன்றாம் முறையாக உங்களிடம் வரப்போகிறேன்;
இம்முறையும் உங்களுக்குச் சுமையாய் இருக்க மாட்டேன். உங்கள் உடைமை எனக்கு
வேண்டாம். எனக்கு வேண்டியது நீங்களே. பெற்றோர்க்குப் பிள்ளைகள் பொருள்
சேர்த்து வைப்பதில்லை; பெற்றோர் பிள்ளைகளுக்குப் பொருள் சேர்த்து வைப்பதே
முறை.
15 ஆதலால் எனக்குள்ளதையும் ஏன், என்னை முழுவதுமே
உங்கள் ஆன்மாக்களுக்காக மனமுவந்து தியாகம் செய்வேன். இந்த அளவுக்கு நான்
உங்கள் மீது அன்பு வைத்திருக்க, என்மேல் உங்களுக்குள்ள அன்பு குறைந்து
கொண்டு போக வேண்டுமா? இருக்கட்டும்;
16 நான் உங்களுக்குச் சுமையாய் இல்லை என்றாலும், சூழ்ச்சிமிக்கவனாய் உங்களைக் கபடமாகச் சிக்க வைத்தேனாம்!
17 அப்படி நான் உங்களிடம் அனுப்பியவர்களுள் எவனைக்கொண்டேனும் உங்களை வஞ்சித்தேனா?
18 தீத்துவைப் போகும்படி கேட்டுக்கொண்டேன்; அவரோடு
நம் சகோதரரை அனுப்பினேன்; தீத்து உங்களை வஞ்சித்தாரா? நாங்கள் ஒரே
ஆவியானவரின் ஏவுதலால் நடக்க வில்லையா? ஒரே அடிச்சுவடுகளையே பின்பற்ற
வில்லையா?
19 நாங்கள் குற்றமற்றவர்களென உங்களுக்கு
எண்பிப்பதாக இவ்வளவு நேரமும் எண்ணியிருப்பீர்கள். கிறிஸ்துவுக்குள்,
கடவுள் திருமுன் சொல்லுகிறேன்: என் அன்புக்குரியவர்களே, நாங்கள்
செய்வதெல்லாம் உங்கள் ஞான வளர்ச்சிக்காகவே.
20 நான் வரும்போது, உங்களை நான் காண விரும்பும்
நிலையில் நீங்கள் இருப்பீர்களோ என்னவோ! நானும் ஒருவேளை நீங்கள் காண
விரும்பாத நிலையில் இருக்கலாம். உங்களிடையே சண்டை சச்சரவுகள், பொறாமை,
சினம், கட்சி மனப்பான்மை, கோள், புறணி, செருக்கு, குழப்பங்கள் முதலியன
இருக்கக் காண்பேனோ என்னவோ!
21 மேலும் நான் உங்களிடம் மறுபடியும் வரும்போது,
என் கடவுள் என்னை உங்கள் பொருட்டுத் தாழ்வுறச் செய்வாரோ என்னவோ! முன்பு
பாவம் செய்தவர்களுள் பலர் தங்களுடைய அசுத்த செயல்கள், கெட்ட நடத்தை,
காமவெறி ஆகியவற்றை விட்டு மனந்திரும்பாதிருத்தலைக் கண்டு நான்
அழவேண்டியிருக்குமோ என்னவோ!
No comments:
Post a Comment