Friday, November 29, 2013

ஆண்டவருடைய அடியானான மோயீசன் இறந்த பின்பு, ஆண்டவர் மோயீசனின் ஊழியனும் நூனின் மகனுமான யோசுவாவை நோக்கி,
2 நம் அடியானாகிய மோயீசன் இறந்தான். நீயும் எல்லா மக்களும் எழுந்து, யோர்தானைக் கடந்து இஸ்ராயேல் மக்களுக்கு நாம் கொடுக்கவிருக்கும் நாட்டிற்குப் போங்கள்.
3 நாம் மோயீசனுக்குச் சொன்னது போல், உங்கள் காலடிபட்ட இடத்தையெல்லாம் உங்களுக்குக் கொடுப்போம்.
4 பாலைவனமும் லீபானும் தொடங்கி இயூப்ரடிஸ் மாநதி வரையிலும், மேற்கே பெருங்கடல் வரையிலும் அடங்கிய ஏத்தையருடைய நாடெல்லாம் உங்களுக்கு எல்லையாயிருக்கும்.
5 உன் வாழ்நாள் முமுவதும் ஒருவனும் உங்களை எதிர்த்து நிற்க முடியாது. நாம் மோயீசனோடு இருந்தது போல, உன்னோடும் இருப்போம். நாம் உன்னை விலக்கி விடவுமாட்டோம், கை விடவுமாட்டோம்.
6 நீ உறுதியும் மனத்திடனும் கொண்டிரு. ஏனெனில், இம்மக்களின் முன்னோர்களுக்கு நாம் வாக்களித்துள்ள நாட்டை நீயே திருவுளச் சீட்டுப்போட்டு இவர்களுக்குப் பகுத்துக் கொடுப்பாய்.
7 நம் அடியானான மோயீசன் உனக்குக் கொடுத்த சட்டங்களை எல்லாம் பேணிக்காத்து அவற்றின்படி ஒழுகுமாறு நீ உறுதியும் மனத்திடனும் கொண்டிரு. நீ எது செய்தாலும் அதைத் தெளிந்து செய்யும் படி அவற்றினின்று சிறிதேனும் வழுவாதே.
8 இச்சட்ட நூல் உன் கையை விட்டுப் பிரியாதிருப்பாதாக. அதில் எழுதியுள்ளவற்றைப் பேணிக் காத்து அவற்றின்படி ஒழுகுமாறு, அவற்றை இரவு பகலாய்த் தியானிப்பாயாக. அப்படிச் செய்தால்தான், நீ உன் வழியைச் செவ்வையாக்கி அறிவுடன் நடந்து கொள்வாய்.
9 உறுதியும் மனத்திடனும் கொண்டிரு என்று இதோ நாம் உனக்குக் கட்டளையிடுகிறோம். திகைக்கவோ மதிகலங்கவோ வேண்டாம். ஏனென்றால், நீ போகும் இடமெல்லாம் உன் ஆண்டவாகிய கடவுள் உன்னோடு இருப்பார்" என்றருளினார்.
10 அப்போது யோசுவா மக்கட் தலைவர்களை நோக்கி, "நீங்கள் பாளையத்தின் நடுவே சென்று மக்களைப் பார்த்து,
11 'பயணத்துக்குத் தேவையான உணவுப் பொருட்களைத் தயார் செய்யுங்கள். ஏனெனில், மூன்று நாட்களுக்குப் பின் நீங்கள் யோர்தானைக் கடந்து சென்று உங்கள் ஆண்டவராகிய கடவுள் உங்களுக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டை நீங்கள் உரிமையாக்கிக் கொள்ளப்போகிறீர்கள்' என்று சொல்லுங்கள்" என்றார்.
12 பின்பு யோசுவா ரூபானியரையும், காத்தியரையும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரையும் நோக்கி,
13 ஆண்டவருடைய அடியானான மோயீசன் உங்களுக்குக் கற்பித்தவற்றை நினைவில் கொள்ளுங்கள். அதாவது உங்கள் ஆண்டவராகிய கடவுள் உங்களுக்கு இந்த நாடு முழுவதையும் தந்து அமைதி அளித்துள்ளார்.
14 உங்கள் மனைவியரும் பிள்ளைகளும் விலங்குகளும் யோர்தானுக்கு இப்புறத்தில் மோயீசன் உங்களுக்குக் கொடுத்த நாட்டிலேயே தங்கி இருக்கட்டும். ஆனால் நீங்கள் யாவரும் ஆயுதம் தாங்கியவர்களாய் உங்கள் சகோதரர்களுக்கு முன்பாகச் செல்லுங்கள்.
15 ஆண்டவர் உங்களைப் போல் உங்கள் சகோதரர்களுக்கும் அமைதி அளித்து, உங்கள் ஆண்டவராகிய கடவுள் அவர்களுக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டை அவர்கள் உரிமையாக்கிக் கொள்ளும் வரை அவர்களுக்கு உதவியாகப் போர்புரியுங்கள். பிறகு யோர்தானுக்கு அக்கைரையில் கிழக்கே ஆண்டவருடைய அடியானான மோயீசன் உஙகளுக்குக் கொடுத்த உங்கள் சொந்த நாட்டுக்கு நீங்கள் திரும்பிவந்து அங்கு வாழ்ந்து வருவீர்கள்" என்றார்.
16 அப்பொழுது அவர்கள் யோசுவாவுக்கு மறு மொழியாகச் சொன்னதாவது: "நீர் கட்டளையிட்டவற்றை எல்லாம் நாங்கள் செய்வோம். எங்கெங்கு நீர் அனுப்புகிறீரோ அங்கெல்லாம் நாங்கள் செல்வோம்.
17 நாங்கள் மோயீசனுக்குக் கீழ்ப்படிந்து வந்தது போல் உமக்கும் கீழ்ப்படிவோம். உம்முடைய ஆண்டவராகிய கடவுள் மட்டும் மோயீசனுடன் இருந்தது போல் உம்மோடும் இருப்பாராக! உமது சொல்லை மீறி,
18 நீர் இடும் கட்டளைக்குக் கீழ்ப்படியாது நடப்பவன் கொல்லப்படட்டும். நீர் மட்டும் உறுதியும் மனத்திடனும் கொண்டிரும்."

No comments:

Post a Comment